நிம்மதியை தேடும் நினைவுகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வதந்தி படத்தின் முழு பக்க விளம்பரத்தை  ஹிந்து நாளிதழில் பார்த்த போது தோன்றியது.. அதன் பங்களிப்பவரில் ஒருவரான மீரான் மைதீன் பற்றிய எமது நினைவலைகளை எழுதலாம் என்று....

ஆனால் ஏதோ இடற...அவரை எனக்கு அறிமுகம் செய்தவனைப் பற்றி எழுத முடிவு செய்தேன்.

சரியாக ஒன்பது வருடம் இதே நாளில்...(13/12/2013) பல நேரங்களில் என் இடுக்கன் கலைந்த நண்பன் C R குமார் காலத்தே கரைந்தான்.

என்று முதலில் பார்த்தோம்...? எப்படி பழகினோம்..? என்று இருவருக்குமே நினைவில் இல்லை... ஆனால் அன்றைய தினம் பின்னிரவில் அவன் பேச்சு மூச்சற்று விழுந்திருக்கிறான் என அலை பேசியில் வந்த தகவல் எனை புரட்டிப் போட்டது. 

அவசரமாக கிளம்பி சூர்யா மருத்துவமணை சென்று பார்த்த போது...அவன் ஒரு காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்த நிலையில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான்.

என் உடன் வந்த நண்பர் மருத்தவரிடம் சென்று நாம் திரைப்படங்களில் காணும் சில யுக்திகளை செய்து பாருகங்களேன் என கெஞ்சுகிறார்...எப்படியாவது மீண்டும் உயிர்பெற்று விடமாட்டானா என்ற பதபதைப்புடன்.

அவன் ஆளுமை அப்படி... (இல்லாவிட்டால் அன்று பணியில் இருந்த இரண்டு மின்சார வாரிய பொறியாளர்கள் - அப்போது தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு மென்பொருள் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த வகையில் அவர்கள் எங்கள் வாடிக்கையாளர் அவ்வளவே - சொந்த செலவில் கார் வைத்துக்கொண்டு அரூர் வரை பயணம் செய்து இறுதி மரியாதை செலுத்தியிருப்பார்களா?)

காரில் சடலமாக இருந்த நண்பனிடம் "இப்படி நட்டாற்றில் விட்டு சென்று விட்டாயே, இனி நான் என்ன செய்வேன்?" என அரற்றினேன். 

பதிமூன்று வருடங்களாக என்னுடன் தொழில் முறையாய் பயணித்து பல சுக துக்கங்களில் தோளோடு தோள் நின்றவன் இப்போது இல்லை என்று ஆகிப் போனதும் நூலறுந்த பட்டமாக சில நாட்கள் திரிந்தேன். பேச்சு வழக்கில் "நடைபிணம்" என்பார்கள்.

நான்கு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் அவனது வகுப்புத் தோழன் டோக்யோவில் இருந்து தொடர்பு கொண்டு "நாலு நாள் எனக்கு எதுவும் ஓடலை...நீ எப்படி இருக்க?" என்று கேட்டதும் தான் மீண்டும் யதார்த்ததிற்கு வந்தேன்.

அவன் நினைவை நிலைத்து வைக்க வேண்டும் என முடிவோடு பலவற்றை முன்னெடுத்தேன்...எல்லாம் தோல்வி.

ஒன்பது வருடம் கழிந்த நிலையில் இப்போது தான் உணர்கிறேன்...அவன் எனக்கு எவ்வளவு பெரிய அரணாக இருந்திருக்கிறான் என்று. 

"அவன் இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா?" என்பது என்னை பொறுத்தவரையில் வெறும் வசனம் இல்லை... உண்மை. கடந்த சில காலமாக நான் சந்தித்த பல அவலங்களை அவன் கண்டிப்பாக தடுத்திருப்பான் என்பது உறுதி.

இந்நாளில் மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன் நண்பா...

நிம்மதியாக நீ...
நினைவுகளுடன் நான்...

பிகு : தோழர் மீரான் மைதீன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் நண்பன் தான். அவரைப்பற்றி நான் எழுத நினைத்ததும், எங்கள் மூவரையும் இணைத்த ஒரு மிகப்பெரிய ஆளுமையைப் பற்றியும், பிரிதொரு தருணத்தில்.

சாமி

செண்பகா தேவிக்கு பார்வை மங்க தொடங்கி சில மாதங்கள் ஆகிவிட்டன. உடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை. சிந்தனை தெளிவாக இருந்தது. ஏற்கனவே ஒரு அற்புத மன நிலைக்கு சென்று விட்டவள், அதன் விளைவாக பேச்சை குறைத்துக் கொண்டாள்.

பல கேள்விகளுக்கு புண்ணகையையே பதிலாக்கினாள். ஒரே புண்ணகை. எந்த கபடமும் அற்றது.

கருத்து கேட்பு கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்ற போது, 'ஏன் பாட்டி பாதியில போறீங்க?' என்று வாயிலில் ஒருவன் கேட்ட போதும், அதே புண்ணகை.

"இல்லை பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும். ஏதாவது வண்டி வச்சு வீட்டில இறக்கி விட்டுடறேன்"

அவனை சிறிது விநாடி உற்றுப் பார்த்த பின் சொன்னாள்:

"இல்லபா. இவங்க பேசற பலது புரியல, ஆனா ஊருக்கு நல்லதுனு சொல்றாங்கனு தெரியுது. நான் இருந்து அதை கெடுக்கவா போறேன? நடந்து பழகிடுச்சு."

மீண்டும் அதே புண்ணகையோடு அவனை கடந்து சென்றாள்.

ஆனால் இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். திடீரென்று நேற்று வந்து சொன்னார்கள், இன்றைக்கு சில அதிகாரிகள் வருவார்கள் என்று. பல விதமான அதிகாரிகளைப் பார்த்து பழகியதால் அது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.

 'ஆனால், ஏன் என்னை பாக்கனும்?'

வழக்கம் போல விளக்கை ஏற்றிவிட்டு வாசலில் இருந்த மண் திண்ணையில் அமர்ந்தாள். தெரு கோடியில் பேண்ட் சட்டை போட்ட நான்கைந்து பேர். சற்று தள்ளி ஒரு ஜீப். அதில் ஏதோ எழுதியிருந்தது. அது என்ன என்று படிக்க செண்பகா தேவிக்கு தோன்றவில்லை.

அப்படியே சுவற்றில் சாய்ந்து சில நேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள்.

'எத்தனை வருடம் ஆயிற்று? எட்டா ஒன்பதா?' நினைவுக்கு வரவில்லை. ஆனால் இத்தனை தூரம் கடப்போம் என எதிர்பார்த்திருக்கவில்லை. காலம் எல்லோரையும் போல தன்னிடமும் சதிராட்டம் ஆடுவதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

மெலிதாக தூறத் தொடங்கியது. மனம் இளமைக்கு திரும்பியது. மழை எவ்வளவு அற்புதமானது? ஆத்திரத்துடன் கொட்டி தீர்த்து வாழ்விடத்தை புரட்டிப் போட்ட போதும், அடுத்த முறை வரும் போது வெறுக்கத் தோன்றியது இல்லை. மழை ஒவ்வொருவருக்குமான நெருங்கிய நட்பு. எத்தனை கூட்டத்தில் இருந்தாலும் எல்லோரும் தனித்தனியே மழையோடு உரையாடுவர்.

ஆனால் இப்போது வெறும் சாரல் மாதிரியானது. சீக்கிரமே நின்று விடும். 

ஒரு பெரு மூச்சு விட்டபடி இடதுபுறம் திரும்பினாள். ஆட்கள் ஒவ்வொரு வீடாக சென்று எதையோ குறிப்பெடுப்பது பொல தோன்றியது. அசவர்களைத் தொடர்ந்தபடி ஜீப்பும் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

ஒருவன் மட்டும் அவர்களுக்கு முன்னரே ஒவ்வொரு வீட்டில் இருப்பவருக்கும் ஏதோ சொன்னபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தான். நடையை பார்த்தால் முருகன் போல தொன்றியது.

முருகன் சிறு பிள்ளையாக இருக்கும் போது பல நேரம் அவள் வீட்டில் தான் இருப்பான்,  எப்போதும் அவளை வம்பிழுத்துக் கொண்டே. வீட்டுக்குள் எல்லா உரிமையும் இருந்தும், திருட்டுத் தனமாக மாங்காய் பறித்து திண்பதில் குறியாக இருப்பான். அதோடு நிற்காமல், வீட்டில் இருந்த மூன்று மாமரங்களையும் குத்தகை எடுத்தவனிடம் சென்று மாங்காயை பறித்ததைப் பற்றி சொல்லி பெரிய சிக்கலை உருவாக்குவான்.

ஒவ்வொரு முறையும் செண்பகா தேவி தான் சமாளிப்பாள். ஆனால், அதெல்லாம் அவன் சிறு வயதாக இருக்கும் போது. வளர்ந்ததும் ஆள் மாறிவிட்டான். புதிதாக வேலை கிடைத்து தூத்துக்குடி போன கொஞ்ச நாளிலேயே திரும்பி வந்து விட்டான்.

"உன்னை விட்டு ரொம்ப தூரம் இருக்க முடியல...அதான் திரும்ப வந்துட்டேன்"

"இங்க இருந்து என்ன பண்ண போற?"

"ரியல் எஸ்டேட். வருஷத்துக்கு ரெண்டு மூனு டீல் பண்ணா கூட போதும். ஊருலேயே இருந்தா மாதிரியும் ஆச்சு"

சொன்னது போலவே, திரும்ப அவன் எங்கும் செல்லவில்லை. சொல்லப் போனால் கடந்த ஏழெட்டு வருடங்களில், கிட்டத்தட்ட அனைத்து நாட்களும் அவளுடனே அவள் வீட்டில் தங்கியிருந்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக வருகையை குறைத்துக் கொண்டான். பேச்சைக் கூட.

இப்போது கூட ஊருக்குள்ள போடற ரோட்டுக்கு அவன் தான் நிறைய வேலை செஞ்சிருக்கானு பேச்சு. அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. தனியாக நின்று சாதிக்கிறான். 

புது ஆட்கள், மெதுவாக அவள் வீட்டை நோக்கி வந்தார்கள். முன்னால் வந்த முருகன், அவள் வீட்டு வாசலில் ஒரு கனம் நின்று அவளைப் பார்த்தான். அவன் கண்களில் ஒருவித கலவரம் தெரிந்தது. ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. எல்லோர் வீட்டிலும் சென்று ஏதோ சொல்லிக் கொண்டு வந்தவன், அவள் வீட்டுக்குள் மட்டும் வரவில்லை. வேகமாக அடுத்த வீடு சென்று ஒளிந்த படி அவளைப் பார்த்தான்.

இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று செண்பகா தேவி குழம்பியபடி இருக்க, இப்போது புது ஆட்கள் அவள் வீட்டுக்குள் வந்தார்கள்.

"அம்மா. உங்க பேரு?"

"செண்பகா தேவி"

"இந்த இடம் மொத்தம் எத்தனை ஏரியா தெரியுங்களா?"

"தெரியும். 22 செண்ட்"

"பின்னாடி ஏதாச்சும் தோட்டம் இருக்குங்களா?"

"இப்ப இல்ல"

அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். வந்தவர்களில் ஒருவன் ஏதோ காகித படிவத்தை வேகமாக நிரப்பிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

செண்பகா தேவி, முதலில் பேசியவரைப் பார்த்து...

"ஆமாம்..இதெல்லாம் ஏன் கேக்கறீங்க? நீங்க ஊருக்கு புதுசா?"

"ஆமாம்மா, நாங்க ஹை வேஸ் டிபார்ட்பெண்ட்டுல இருந்து வர்றோம். புதுசா ரோடு போடறதுக்காக இடங்களை கையகபடுத்துற வேலைய ஆர்ம்பிச்சிருக்கோம்....ஊருல சொல்லியிருப்பாங்களே...?!"

`கையகபடுத்துற வேலை'

இப்போது, செண்பகா தேவியின் முகம் மாறியது. முருகன் இத்தனை நாள் தன்னிடம் இருந்து விலகியதன் காரணம் புரிந்தது. வலது பக்கம் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தை பார்க்க தெம்பில்லாமல் தலையை மறைத்துக் கொண்டான்.

"சரிம்மா....இந்த இடத்துக்கு ஈடாக முப்பதாயிர ரூபாய் அரசாங்கம் நிர்ணயம் பண்ணியிருக்கு. பணம் பத்தலைனா கோர்ட்டுல பேசி அதிகமா வாங்கிக்கலாம். அதுக்கு நாங்க உதவி பண்றோம்"

"முப்பதாயிரமா? எதுக்கு??"

"புரியுதுமா. உங்களுக்கு தேவையான வசதிகளோட தங்க அரசாங்கமே ஒரு இடம் ஏற்பாடு பண்ணி குடுத்துடும். பட்டாவும் உங்க பேருலேயே இருக்கும். இந்த பணம் இந்த இடத்துக்கான ஒரு நஷ்ட ஈடு மாதிரி"

"இடத்தை மாத்துவீங்களா? அப்ப இங்க இருக்கிறது?"

"தோட்டம் தான் எதுவும் இல்லைனு சொன்னீங்களமா....வேற என்ன இருக்கு?" - சொல்லியபடி பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ கேட்க....

"சாமி இருக்கு!"

"ஓ...கோவிலா...மன்னிச்சிக்கோங்க...எனக்கு தெரியாது. எச்சாரென்ஸியில சேந்ததா...." 

"இல்லை"

"சரி, என்ன கோவில்?"

"நெல்லையப்பன்"

"சிவன் கோவிலா?"

"இல்லை....நெல்லையப்பன்" - இப்போது சற்று சத்தமாக சொன்னாள்.

"சரிமா...அதுக்கும் சேத்து ஏற்பாடு பண்ணிடலாம்....அரசாங்க செலவிலேயே கோவிலை கட்டிடலாம். உங்களைய ட்ரஸ்டியா போடற மாதிரி ஏற்பாடு பண்ணலாம்..."

"கொவிலை எடம் மாத்துவ...சாமிய எப்படி மாத்துவ...?"

கோபமாக கேட்டுவிட்டு, திரும்பி வேகமாக வீட்டுக்குள் நுழைந்து பின் பக்கம் போய் சடேரென்று சம்மணமாய் விழுந்தாள்.

திடிக்கிட்ட அதிகாரி...மெல்ல பின் பக்கம் சென்று பார்த்தார்....அங்கு அவளுக்கு எதிரே ஒன்னரை அடி உயரத்தில் ஒரு கருங்கல் நடப்பட்டு, அதன் மேல் குங்குமம் வைக்கப் பட்டிருந்தது. குழப்பமானவர், திரும்பவும் முன் பக்கம் வந்தார்.

உடன் வந்தவர்கள் பதறியபடி.....

"இப்ப என்ன செய்யறது ?"

"நாம என்ன பண்ண முடியும். ஊரே ஒத்துகிட்ட பிறகு ஒருத்தரு ஒன்னும் பண்ண முடியாதே...கோர்ட்டுக்கு போனாலும் நிக்காது. இன்னும் டயம் இருக்கே...பாத்துக்கலாம். முருகன் எங்கே?"

இதையெல்லாம் பக்கத்து வீட்டில் இருந்த படி கேட்டுக் கொண்டிருந்த முருகன் திண்ணையில் விழுந்து அழத் தொடங்கினான். ஒச்சாயி பாட்டி, அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

"இதுல வர்ற கமிஷன்ல் சாமிக்கு ஒரு கோவிலை கட்டலாம்னு தானே இதுல இறங்கினேன்...இப்ப இப்படி ஆயிடுச்சே ஆத்தா..."

"நீ கவலப்படாதடா....நெல்லையப்பன் உண்மையிலே சாமி தான்...உனக்கும் ஆத்தாவுக்கும் கண்டிப்பா நல்ல வழி காட்டுவான்."

அரும்பாகி....மொட்டாகி....



காயத்திரி தேவி, கண்ணாடியைப் பார்த்து ஒப்பனையை சரி செய்து கொண்டாள். முன்னால் துருத்தியிருந்த ஒரே ஒரு வெள்ளை முடியை கத்தரித்துவிட்டு, தலைமுடியை சரி செய்தாள்.  குடுவையில் இருந்து இரண்டு மாத்திரைகளை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்து விட்டு, கையை திருப்பி நேரம் பார்த்தாள். 

இன்டெர்காம் ஒலித்தது. பேசிவிட்டு வந்து மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்றாள். சிறிது நேரம் கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

'இன்று புதிதாய் பிறந்தோம்'

பக்கத்தில் படுக்கையில் படுத்திருந்த கௌதம், புரண்டு படுத்தான். கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் தேவியை, அவனும் சிறிது நேரம் பார்த்தான். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கும் மலர் போல இருக்கும் அவள் அழகுக்கு அவள் உள்ளமே காரணம் என ஆழமாக தொன்றிற்று.

"இன்னிக்கி சர்ஜரி இருக்கா?"

காயத்திரி தேவி, திரும்பி அவனைப் பார்த்து மெலிதாக சிரித்தாள்.

"ஆமாம். மூனு இருக்கு. எட்டரை மணிக்கு உத்திராடம் முடியுது. அதுக்குள்ள முடிக்கனும். உத்திராடத்தில் ஒரு பிள்ளை உணவுக்கு பஞ்சமில்லை"

சொல்லிவிட்டு மிக பலமாக சிரித்தாள்.

"ஏன் கிண்டல் பண்ற...ஒவ்வொருத்தருக்கு ஒரு நம்பிக்கை"

"நான் கிண்டல் பண்ணல...போன வாரம் வரைக்கும் குழந்தை பத்திரமா பொறக்குமானு சந்தேக பட்டவங்களுக்கு, அது கண்ஃபர்ம் ஆனதும் தான் நட்சத்திரம் ஞாபகம் வருதுனு நெனச்சேன். அதான். யாரும் எதையும் எப்பவும் முழுசா நம்பறதில்லை"

"எல்லோரும் உன்னை மாதிரி இருக்க மாட்டாங்க, தேவி"

அவள் சிரிப்பு  நின்றது. கௌதமை வெற்றுப் பார்வையால் துளைத்தாள். இது நேற்றைய வாதத்தின் தொடர்ச்சியோ என்று தோன்றியது.

அவனுக்கோ, அசந்தர்ப்பமாக சொல்லிவிட்டோமோ என்று பட்டது. ஆனாலும், அது தவறு என்று சமாதானம் சொல்ல தோன்றவில்லை. அவளுக்கு அது பிடிக்காது. மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி, பாத்ரூமை நோக்கி நடந்தான். கதவை திறந்து விட்டு, திரும்பி அவளைப் பார்த்து, "நான் எதையும் யோசிச்சு சொல்லலை...அதனால நீ போயி வேலைய பாரு" என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல், லேசாக சிரித்து விட்டு, தன் பையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

சாய் தேவி மருத்துவமனை, நகரின் பிரதான சாலையில் இருந்தாலும், உள்ளே நுழைந்து விட்டால், அவ்வளவு அமைதியாக இருக்கும். காயத்திரியும், கௌதமும் பார்த்து பார்த்து கட்டியது. சுற்றிலும் உள்ள சுவரின் வெளிப் புறத்தில் கிளாஸ் உல் பலகைகள் மூலம் வெளிஒலியை அதிக அளவில் வடிகட்டியிருந்தார்கள்.  கட்டிடம், கிழக்கும்-மேற்குமாக இருந்ததால், வெப்பமும் சிறிது நேரமே கட்டிடத்திற்குள் ஊடுறுவும். ஆங்காங்கே நீரூற்றுகளை வைத்து, அதனையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இசையை அனுபவித்தபடி, நான்காவது மாடியில் இருந்த வீட்டில் இருந்து படிகட்டு வழியாக இரண்டாம் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தாள் காயத்திரி.

இன்றைய நாளின் இனிய தொடக்கம்.

எட்டு மணிக்கெல்லாம்  பரபரப்புத் தொற்றிக் கொண்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் வசதிக்காக காலை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. எவ்வளவு படபடப்புடன் அவர்கள் உள்ளெ நுழைந்தாலும், அந்தச் சூழல் அவர்களையும் அறியாமல் ஒருவித அமைதியை கொடுக்கும். காயத்திரியும் அவள் பங்குக்கு துரிதமாக செயல் படுவாள்.

அவர்களின் முறை முடிந்ததும், கருவுற்ற பெண்களின் மாதந்திர சோதனைகள், உணவு இடைவேளைக்குப் பிறகு, முதல் முறை வருபவர்கள், பின்னர் மீண்டும் கருவுற்ற பெண்களின் சோதனை என காயத்திரியாக வகுத்துக் கொண்ட  தினசரி அட்டவணை. நேரம் கிடைக்கும் போது இரண்டு முறை மருத்தவமனையில் தங்கியிருக்கும் பெண்களை சென்று பார்ப்பாள். அதனாலேயே பொதுவாக அறுவை சிகிச்சைகளை காலையிலேயே முடித்து விடுவாள். யாராவது, நேரம் குறித்து வந்து கேட்கும் போது, அவர்களுக்காக அந்த நேரத்தில் செய்வாள். ஆனால் அது அரிதாகவே நடக்கும். ஏனெனில், அங்கு வருவோர்கள் ஒரு குழந்தை வராதா என்கிற ஏக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு பொதுவாக நேரம் முக்கியமாக படாது. தவிர, காயத்திரி சுகப் பிரசவத்திற்கு முன்னுரிமை கொடுப்பாள். அதற்காகவே நன்கு தேர்ந்த ஆயாக்கள் அங்கு பணியில் உண்டு.

அன்றும் காலையில் வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டு வந்து தனது நாற்காலியில் அமர்ந்து தன் மற்ற பணிகள துவக்க தயாரானாள். 

"மேடம் தாய் டிவியில இன்னிக்கி இண்டெர்வியூ ஃபிக்ஸ் பண்ணியிருக்கு. கண்ஃபர்ம் பண்ணிடலாமா?"

காயத்திரி, சரி என்பது போல் தலையசைத்தாள். 

"ஸ்கேனுக்கு வரச் சொல்லலாமா?"

“ஒரு பத்து நிமிஷம். பஸ்ஸர் அடிச்சதும் வரச் சொல்லு"

ஸிஸ்டர் வெளியே சென்று கதவை சாத்தினாள். 

காயத்திரி, டிராயரில் இருக்கும் Insulin injection எடுத்து. இடுப்பில் போட்டுக் கொண்டு, சிறிது நேரம் கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்து கொள்கிறாள். மெல்ல முந்தின நாள், கௌதமுடன் பேசியதை அசை போட்ட படியே, கண்களை சுழல விட்டாள்.

சீராக அடுக்கி வைக்க்கப் பட்ட மேஜையின் ஒரு ஓரத்தில், முருகன் படமும், ஷீரடி சாயிபாபாவின் படமும் வைக்கப் பட்டிருந்தன. சுவற்றில் ஒரு குழந்தை படமும், அதன் இருபுறமும் இரண்டு போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. விதவிதமான போஸ்டர்கள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

“We had a dream and it was you...We made a wish and you came true” 

“The Wisdom and compassion a woman can intuitively experience in childbirth can make her a source of healing and understanding for other women”

மேஜையில், Dr Carl Wood எழுதிய Gynaecological Operative Laparoscopy புத்தகம் பாதி படித்த நிலையில் இருந்தது.

மேஜை கடிகாரம் 9:00 காட்ட, பஸ்ஸரை அழுத்துகிறாள். 

இயந்திரம் சுழல ஆரம்பித்தாலும், அவளது முகத்தில் மட்டும் மாறாத புண்ணகை. அது தனது பதினாறாவது வயதில், ஜெனிஃபர் டீச்சர் சொல்லிக் கொடுத்தது. வெறும் ஆசிரியை நிலை தாண்டிய அற்புத உறவு அது. அன்றைக்கு மட்டும் டீச்சர் இல்லை என்றால், இன்றைக்கு இந்த காயத்திரி தேவி இப்படி இருந்திருக்க மாட்டாள். 

திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள், குறைந்த காலம் என்றாலும் வீட்டில் இருப்போரின் அழுத்தத்தின் காரணமாக அங்கு வருபவர்கள், உடல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள் என பலதரபட்ட ஆட்களை தினப் படி சந்தித்தும், அவளுக்கு துளியும் சங்கடம் இல்லை. சிரித்த படி எல்லாவற்றையும் சமாளித்து கைராசி டாக்டர் என்று பெயர் பெற்ற அவளுக்கு, கௌதமுக்கு என்ன பதில் சொல்வது என்பது மட்டும் விளங்கவில்லை. காலம் எப்போதுமே ஒரே மாதிரி சுழலாது என்று ஆணித்தரமாக நம்பும் சீதாவின் அமைதியும் அவளை வாட்டியது. தனது ஒரே மகனுக்கு இன்னும் குழந்தை இல்லையே என்கிற எந்த வித சலனுமும் சீதாவின் சிந்தனையிலும் செயலிலும் இருப்பதாக தெரியவில்லை. அது காயத்திரிக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது. ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்து தான் ஜெனிஃபரை சந்திக்க தகவல் அனுப்பினாள். காரணமின்றி முதல் முறை மயங்கி விழுந்ததில் தொடங்கி, தொடர்ந்து நடந்த பரிசோதனைகளும், அதன் முடிவுகளும், எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின்னர் ஜெனிஃபர் அவளை அணைத்து ஆறுதல் சொல்லியதிலிருந்து அவளது வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஜெனிஃபர் இருந்தார்.

கௌதம் முதல் முறையாக காயத்திரியிடம் மனம் திறந்து திருமணம் பற்றி பேசிய போதும், ஜெனிஃபரே அவனிடம் முழுமையாக பேசினார். முதலில் அதிர்ந்த கௌதம், பின்னர் காயத்திரியின் கடந்தகால பிரச்சனைகளயும், இப்போதைய அவளது மனநிலையயும் அறிந்து பெருமை கொண்டான். அவன் மனதில் அவள் ஒரு விஸ்வரூபம் காட்டி நின்றாள். அந்த நொடியில் தான் அவனும் வாழ்க்கையை நேசிக்கத் தொடங்கினான். 

நேஹா, மூண்று கேமிரா கோணங்களையும் சரி பார்ததாள். மனோஜ், இன்ஸிடெண்ட் லைட் மீட்டரை வைத்து, வெளிச்சததை சரி பார்த்துக் கொண்டான். ஷாலினி, ஒரு முறை, கேட்க வேண்டிய கேள்விகளின் ஆர்டரை சரிபார்தது, சில திருத்தஙகளை செய்து கொண்டாள்.

அறைக்குள் ஜெனிஃபர் நுழைந்து, நேஹா அருகில் சென்று நின்றார். 

"ஹலோ ஆண்டி. வர மாட்டேனு சொன்னீங்க?

"அப்படித் தான் சொன்னேன். காயத்திரி தான் கூப்பிட்டது. நிகழ்ச்சி எவ்வளவு நேரம் ஆகும்?"

"பன்னெண்டு நிமிஷத்துக்கு தான் ஃபுட்டேஜ் தேவைப்படும். கெஸ்ட் கம்ஃப்ர்டபிளா ஃபீல் பண்ணினா...ஒரு மணி நேரத்துல வைண்ட் அப் பண்ணிக்கலாம்"

ஜெனிஃபர் கை கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டார். திடீரென்று ஏன் கூப்பிட்டாள் என்று தெரியவில்லை. என்னவோ இருக்கிறது. இல்லை என்றால் அவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்க மாட்டாள்.

யோசித்த படியே, ஒரமாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து மொபைலை திறந்தார்.

காயத்திரி அவர் வாழ்க்கைக்குள் வந்தது தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால் பார்த்த உடனே ஒரு பந்தம் உருவாயிற்று. பதினொன்றாம் வகுப்பிற்காக புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்களில் காயத்திரியும் ஒருவள். கெமிஸ்ட்ரி பாடம் சொல்லிக் கொடுத்த ஜெனிஃபர் தான், வகுப்பு ஆசிரியையும் கூட. புத்திசாலியாக தெரிந்த காயத்திரி, அவ்வப்போது, எல்லோரிடம் இருந்தும் விலகி, தனிமையை நாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை, ஜெனிஃபர் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக பேச்சுக் கொடுத்துப் பார்த்தார், ஆனால் அவர் கேட்ட கேள்விகளுக்கான பதிலைத் தவிர வேறு எதுவும் காயத்திரி சொல்ல மாட்டாள்.   

லேபில் ஒரு நாள் காயத்திரி திடிரென்று மயங்கி விழுந்ததை முதலில் சாரு தான் பார்த்து, ஜெனிஃபரிடம் சொன்னாள். மயக்கம் தெளிந்த அவளை தனியே அழைத்துச் சென்று விசாரித்த போது தான் தெரிந்தது, காயத்திரி அப்போது தான் ருதுவானாள் என்பது. அடக்க மாட்டாமல் அழுத காயத்திரியை மெதுவாக தேற்றினார் ஜெனிஃபர்.

காயத்திரிக்கு தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். குழந்தையான அவளுக்கு பேச்சு வரவும் மிக தாமதமானது. திடீர் திடிரென்று உடல் மெலிவதும், பின்னர் எடை கூடிவதும் மாறி மாறி நடந்தது. பல மருத்துவர்களைப் பார்த்தும் விளங்கவில்லை. கடைசியில் டாக்டர் ரவிச்சந்திரன் தான், அவளுக்கு இருந்த மரபணு குறைபாட்டினை கண்டறிந்து சொன்னார். தந்தை வழியில் தலைமுறைகளை கடந்து வரும் ஒரு குறைபாடு. இது தான், இப்படித் தான் என சொல்ல முடியாமல், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள். பொதுவாக ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு வரும் அந்த குறைபாடு, காயத்திரிக்கும் வந்திருக்கக் கூடும் என ரவி தான் சொன்னார்.

அதனாலேயே வழக்கமான காலம் தள்ளி அவள் ருது ஆனது. அதன் பின்னர் சுழற்சிகளும் ஒரு வரையறைக்குள் இல்லாமல் போனது. ஒவ்வொரு முறையும் நாட்கள் செல்ல செல்ல, அவளுக்கு பைத்தியம் பிடித்தது போல இருக்கும். அவளது தாய் மணிமேகலையோ, தானாக தேடி விரும்பி திருமணம் செய்து பிள்ளைக்கு இப்படி சிக்கல் கொடுத்து விட்டோமே என்கிற கவலையில், பூஜையறையிலேயே ஒடுங்கிவிட்டார்.

ஜெனிஃபர் தான் காயத்திரியின் ஒரே ஆறுதல், ஆசிரியை, தாய் போன்ற நிலைகளைத் தாண்டி, ஒரு நெருங்கிய தோழியாகவே அவளுடன் பழகினார். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நின்றூ கை பிடித்து நகர்த்தி சென்றார். அவளை, மருத்துவம் படிக்கச் சொன்னதும், அவளுக்கு குழந்தை பிறப்பில் இருக்கும் சவால்களை அறிந்து, கைனக்காலஜி எடுக்கச் சொன்னதும் அவரே.

எல்லாவற்றிலும் தெளிவாக சிந்தித்து தீர்க்கமாக முடிவு எடுக்கும் காயத்திரி இன்று மட்டும் ஏன் வரச் சொன்னாள்?

ட்டு ஐம்பது மணிக்கு காயத்திரி உள்ளே நுழைந்தாள். கூடவே கௌதமும். ஜெனிஃபரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கௌதம், அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"டாக்டர், நீங்களும் மேடம் கூட உக்காரலாமே?"

"இல்லை, நீங்க பேட்டி எடுக்க வந்தது காயத்திரி கிட்ட. அவங்க மட்டும் இருக்கட்டும். நாம் சும்மா தான் வந்தேன்"

காயத்திரி நடுவில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து, எல்லாம் சரியா என்பது போல கேட்கிறாள். மானிட்டரைப் பார்த்தபடி மனோஜ் கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறான்.

நேஹா அவளிடம் வந்து, “கேள்விகளை வேணா ஒரு தரம் பாக்கறீங்களா, மேடம்?”

காயத்திரி சிரித்தாள். 

“அப்படி என்ன டஃபா கேக்க போறீங்க ? எல்லாத்துக்கும் பதில் சொல்றேண். ஸ்ட்ரெய்ட்டா பிரோக்ராமுக்கு போயிடலாம்"

விளக்குகள் எரிந்து அறையில் வெளிச்சம் சூழ்ந்தது. 

“தாய் டிவி நேயர்களுக்கு நெஹாவின் அன்பு வணக்கங்கள். இப்ப நீங்க பாக்க போற VIPக்கும் நம்ம டிவி பேருக்கும் ஒரு தொடர்பு உண்டு. யெஸ். இன்றைய விருந்தினர், சென்னையின் மிகப் பிரபலயமான மகப்பேறு மருத்தவர். மகப்பேறு மட்டும் இல்லாமல், குழந்தையிண்மை சிகிச்சையில் சிறந்த அனுபவம் உல்ளவர். அவர் கிட்ட பேசி, அவர் அனுபவத்த உங்களோட பகிர்ந்து கொள்ள – முக்கியமா, நம்ம சேனலின் அன்பிற்கினிய பெண் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள ஆர்வமா இருக்கேன். வாங்க நிகழ்ச்சிக்கு உள்ளே போகலாம்....வெல்கம் தி ஒன் அண்ட் ஒன்லி டாக்டர் காயத்திரி தேவி......வணக்கம் மேடம்"

“உங்களுக்கும் தாய் டிவி நேயர்களுக்கும் வணக்கம். கேள்விகளை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ஒரு சின்ன திருத்தம். இது போன்ற நிகழ்ச்சிகளை பெண்களுக்கானதுனு சொல்லி பிராண்ட் பண்ணாதீங்க ப்ளீஸ். ஆண்களுக்கும் கூட இது தேவை. குறிப்பா, குழந்தை பிறப்பதில் இருக்கும் குறைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்கிற அர்த்தமற்ற கருத்து பல காலமா சமூகத்துல பரவியிருக்கு. அங்கிருந்து எல்லாம் மாறினா தான், பிரச்சனைகள் சரியாகும்".

கௌதம், நாற்காலியில் சாய்ந்து கொண்டான். 

“குட் பாயிண்ட் டாக்டர். அது மட்டும் இல்லாம பேட்டிக்கு எனக்கும் ஒரு நல்ல லீட் கொடுத்துட்டீங்க. பொதுவா இந்த மாதிரியான சிகிச்சைகள்ல ஆண்களுக்கான நடைமுறைகள் சிம்பிளாகவும், பெண்களுக்கானது லெபோரியஸாகவும் இடருக்கே...அத பத்தி உங்க கருத்து என்ன"”.

“நீங்களே பதிலையும் சொல்லிட்டீங்க...லேபர் பெயின் வர்றவங்க நடைமுறை லெபொரியஸாகத் தான் இருக்கும். பொதுவா குழந்தை பிறக்குறதுல ஆணின் பங்கு என்பது ரொம்ப முக்கியமானதாக இருந்தாலும் அது ரொம்ப குறுகியது. வைரமுத்து சொன்னது போல "ஆணின் தவிப்பு அடங்கி விடும், பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்". அது மாதிரி தொடர்கிற தவிப்ப பாதுகாத்து, 9 மாசம் கழிச்சு அந்த தவிப்புகள பலனா வெளிய கொண்டு வருவது பெண்கள் கிட்ட இருக்கிறதால, அதை ரொம்ப கவனமா கையாள வேண்டியிருகிறது. அதனால் வெளி பார்வைக்கு அது லெபோரியஸாக தெரிகிறது"

“பிரமாதம் மேடம். பதில் ரொம்ப சூப்பர். உங்களை பொறுத்தவரை உங்க வேலயில எந்த பகுதி சிரமமானது?”

“சிரமமானது என்றால் Gynecology தான். திரண்டு வர்ற வெண்ணைய தாழிய ஒடைக்காம எடுத்துக் கொடுக்கிறது பெரிய சவால். சிரமமாகவும் இருக்கும் அதை வெற்றிகரமா முடிச்ச பிறகு திருப்தியாகவும் இருக்கும்"

“Fertility treatment பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..எந்த மாதிரியான சவால் எல்லாம் எதிர் கொள்வீங்க?”

வழக்கமான கேள்விகள், பதில்கள். ஆனால் கூடிய மட்டும் பதிலை சுவையாக தருவதற்கு காயத்திரி முற்படுவாள். எத்தனை பேட்டிகள் இது வரை...ஆனால் ஒவ்வொரு பேட்டியயும் முதல் முறை மாதிரி அவ்வளவு ஆர்வமாக எடுத்துக் கொள்வாள். அவளைப் பொருத்த வரை, ஒவ்வொரு பேட்டியும் குறைந்தபட்சம் ஐந்து புதிய தம்பதிகளை சென்றடைய வேண்டும் என்கிற ஆசை. 

அவள் பேசப்பேச, கௌதம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு தெளிவாக யோசித்து செயல்படும் இவள் நாம கேட்டதுக்கு மட்டும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாளே. கேட்டதும் தப்பாக தோன்றவில்லை. ஆனால், பதிலும் சொல்லாமல், காரணமும் சொல்லாமல் மௌனமாக இருப்பது ஏன் என்று விளங்கவில்லை.

மெல்ல திரும்பி ஜெனிஃபரை பார்த்தான். அவரும், அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"வழக்கமான சண்டையா?"

ஆம் என்பது போல தலைய ஆட்டினான்.

'ஆனால் இது நாள் வரை இல்லாமல் இன்று மட்டும் ஏன் நம்மை வரச்சொன்னாள் ?'

பேட்டி தொடர்ந்து கொண்டிருந்தது.

“ஏற்கனவே மக்கள் தொகை அதிகமா இருக்கிற நாட்டுல, செயற்கை கருத்தரிப்ப எப்படி சமூக பிரச்சனைக்கான தீர்வாக பாக்கறீங்க?”

“முதல்ல இது எதுவும் செயற்கை முறை இல்லைனு புரிஞ்சுக்கனும். மருத்தவ ரீதியா, தேவைப்பட்டா ஒரு தற்காலிக சூழலை மட்டுமே உருவாக்குறோமே தவிர....குழந்தை எல்லாம் இயற்கையாக வருவது தான். தவிர, அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டுல தான், குழந்தையிண்மை என்பது ஒரு சமூக பிரச்சனையாக இருக்கு. அதை சரி செய்வதே எங்கள் நோக்கம்"

“பொதுவா உங்க கிட்ட வர்ற பேஷண்டுக்கு எத்தனை நாள்ல குழந்தை பிறக்கும்னு ஏதும் கணக்கு வச்சிருக்கீங்களா?”

“கணக்கு வச்சு வேலை செய்ய அது பொருளும் இல்லை, நான் கடவுளும் இல்லை. ஆனா எங்களோட நடைமுறை படி தொடர்ந்து 11 மாதங்கள் தவறாம எங்க கிட்ட வந்தாங்கனா, கூடுமான வரைகும் குறைகளை நிவர்த்தி செஞ்சு குழந்தை பிறக்கும் சூழலை உருவாக்குவோம்"

“அப்புறம் IVF முறையில டிரை பன்ணுவீங்களா?”

“இல்லை, 11 மாசம் அன்பது அதையும் சேத்து தான்"

"தப்பா நினைக்கலனா ஒரு கேள்வி...ஒரு வேளை, IVF கூட ஒத்துழைக்கலனா என்ன செய்வீங்க"

காயத்திரி தேவியின் சிரிப்பு உறைந்தது. உதட்டை கடித்துக் கொண்டாள். முகம் மாறுகிறது. கோப ரேகைகள் படர்கின்றன. அறைக்குள் ஒரு உடனடி பதற்றம்.

நேஹா டென்ஷன் ஆகி, ‘கட்' என்கிறாள். காயத்திரி பக்கத்தில் இருக்கும் கிளாஸில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கிறாள். குனிந்த படியே இருக்கிறாள். இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று பிசைந்து கொண்டிருந்தன.

“ஸாரி மேடம்....இந்த கேள்வியை விட்டுடலாம். ரொம்ப நல்லா வந்திருக்கு இன்டெர்வியூ. கடைசியில டிஸ்டர்ப் செஞ்சதுக்கு ரொம்ப ஸாரி"

காயத்திரி மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒத்திய படி....

“பரவாயில்லை...கேமிரா ஓடட்டும்...நான் பதில் சொல்றேன்"

“வேண்டாம் மேடம்...நான் தான் அவசர பட்டு தப்பா ஏதோ கேட்டுட்டேன்"

“இல்லை. கேள்வி சரிதான். நான் தான் தேவையில்லாம டென்ஷன் ஆயிட்டேன். பதிலை பதிவு செஞ்சுடறேன். எல்லோருக்கும் தெரியனும். கேமிராவை ஓட விட்டு ப்ரொம்ப்ட் பண்ணுங்க ப்ளீஸ்"

திரும்பி அழுத்தமாக கௌவுதமை பார்த்தாள்.

விளக்குகள் மீண்டும் எரிந்தன. நேஹா ஏற்கனவே கேட்ட கேள்வியை பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கேட்கிறாள்.

காயத்திரி நிமிர்ந்து உட்கார்ந்து பேசத் தொடங்குகிறாள். 

“ஒரு வேளை, IVF கூட சரி வரலேன்னா, அடுத்து surragate mother, அதாவது வாடகைத் தாய், மூலம் முயற்சி பண்ணலாம். ஆணின் உயிரணுகளையும், பெண்ணின் கரு முட்டையயும், கருத்தரிக்கும் வாய்ப்புள்ள பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். அது நன்றாக வளர்ந்து குழந்தையாக அந்த பெண் பெற்றுக் கொடுப்பார். கருப்பை தான் வேறு பெண்ணைச் சார்ந்ததே ஒழிய, மரபணு ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அப்படி பிறக்குற குழந்தை, அதனோட உண்மையான பெற்றொரின் வாரிசாகத் தான் இருக்கும். அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கு. ஆனா அது எல்லாம் மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கு. அதனால அந்த முறையை மக்கள் தேர்ந்தெடுக்கலாம்."

மூச்சை சற்று ஆழமாக இழுத்து விட்டு பின் தொடர்ந்தாள்.

"ஆனால், என்னோட தனிப்பட்ட கருத்து என்னனா, அப்படி வேறு ஒரு பெண்ணை ஒன்பது மாதம் தொந்தரவு செய்து, ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதால், என்ன சாதித்து விடப் போகிறோம் ? இது நம்ம குழந்தை அப்படீங்கிற ஈகோ வை திருப்தி படுத்துவதைத் தவிர. கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒன்பது மாதம், எல்லா வலிகளையும் தாங்கி ஒரு பெண் ஓரு குழந்தையை பெற்றுக் கொடுத்த பின், அதற்கும் உனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னால், அந்த பெண்ணிற்கு எப்படி இருக்கும் ? அவள் என்ன மெஷினா? இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பது மேல் தட்டுகளில் தான். பல படித்த, தேர்ந்த அறிவாளிகள் - ஏன் சில டாக்டர்கள் கூட யோசிப்பது இல்லை. அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டிலே, குழந்தையிண்மை எப்படி ஒரு சமூக சிக்கலோ, அதைவிட பெரிய சிக்கல், பெற்றோர் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள். தங்களால் நேரடியாக குழந்தை பெற்றுக் கொல்ள முடியாது என்கிற நிலைமையில் இருப்பவர்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது சொந்த குழந்தை போலவே வளர்க்க முன்வர வேண்டும். காலம் செல்ல செல்ல, அறிவியல் நமக்கு புதுவிதமான கதவுகளை திறந்து வைக்கும். ஆனால் மனிதத்தை தாண்டிய எந்த அறிவியல் கண்டு பிடிப்பிற்கும் இங்கு வேலை இல்லை"

மூச்சு விடாமல் பேசி முடித்தாள். முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நெஹாவிடம் திரும்பி - 

"ஒரு வேகத்துல பேசிட்டேன். தேவையில்லாததை நீக்கிடுங்க. வேறு ஏதாச்சும் கேக்கனுமா?"

இல்லை என்பது போல் அவள் தலையசைத்தாள்.

காயத்திரி எழுந்து, ஜெனிஃபரை கூட பார்க்காமல், வெளியே சென்று, நான்காம் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்றாள். ஜெனிஃபர், கௌதமின் தோளைத் தட்டி, "அவ எதுக்கு என்னை வரச்சொன்னானு புரியுது. இதுக்கு மேல பேச ஏதும் இருக்கானு தெரியலை. பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற கௌதம், அறையை விட்டு வெளியே வந்தான்.

இத்தனை நாள் நாம் எவ்வளவு தொந்தரவு செய்தும் பிடி கொடுக்காமல் இருந்தவள், இன்றைக்கு பொட்டில் அறைந்தது போல பதில் சொல்லிவிட்டாள். 

மனதுக்குள் அவள் இன்னும் இரண்டு அடி உயர்ந்து விட்டாள். இனி எட்டிப் பிடிப்பது என்பது நடக்காத காரியம்.

மெதுவாக படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான்.

நிறைவிலி [சிறுகதை] - ஜெயமோகன்



டாப்ஸ் ஆன் கபேயில் நான் என் நண்பர் பரிந்துரைத்த பெண்ணுக்காக காத்திருந்தேன். எங்கள் நிறுவனம் இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டு நிறைவுசெய்கிறது. அடுத்த ஆண்டு முழுக்க நாங்கள் நடத்தும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், அதையொட்டிய ஆடம்பர விருந்துகள், நான்கு மாநாடுகளை ஒருங்கிணைப்பதற்கான குத்தகையை எடுத்திருந்த கார்டியல் நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளர் அந்தப்பெண். பகா ராய் என்று பெயர். அந்தப்பெயரை நான் அதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை.

காலையில் ஒரு சந்திப்பு முடிந்துவிட்டது. இதையும் முடித்துவிட்டு நான் கிளம்பி மாதுங்காவில் ஒரு கருத்தரங்குக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஒருமுறை அழைத்துவிட்டார்கள். நான் அதன் மைய உரையாற்றுபவன். எங்கள் தலைமைநிர்வாகி சிறப்பு விருந்தினர்.

எட்டுநாட்களாக  நான் மும்பையில் அந்த நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்தேன். ஷெரட்டன் குழுமத்து விடுதி. அந்த குழுமவிடுதிகளின் எல்லா அறைகளும் ஒன்றுபோலவே இருக்கும். ஆகவே நிரந்தரமாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிறைவை அடையமுடியும். அரைத்தூக்கத்தில்கூட நடமாட முடியும். வேறுவேறு வகையான விடுதிகளில் தங்கி சலித்துப்போகும்போது நாம் செல்லுமிடங்களில் எல்லாம் நம் இல்லத்தை எதிர்பார்க்கிறோம். ஆகவே நான் ஷெரட்டனைத்தான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன்.

காலை பத்துமணியுடன் இங்கே காலையுணவு முடிந்துவிடும். அதன்பின் மாலை நான்கு மணிவரை பெரும்பாலும் எவருமே இருக்க மாட்டார்கள். ஒரு காபியுடன் எவரை வேண்டுமென்றாலும் இங்கே சந்திக்கலாம். கருஞ்சிவப்புச் செயற்கைத் தோலுறையிடப்பட்ட வசதியான பெரிய மெத்தை நாற்காலிகள். வெண்ணிறமான மேஜைப்பரப்புகள். பின்னணி ஓசை என்று மெல்லிய இசை மட்டும்தான் இருக்கும். கையை தூக்கினால் மட்டுமே வெயிட்டர் வந்து நிற்பார். ஓசையில்லாத நடமாட்டம் கொண்ட வெள்ளை ஆடை உருவங்கள்.

இதமான வெளிச்சம். மிகப்பெரிய கண்ணாடித்திரைக்கு அப்பால் புல்வெளியும் சீரமைக்கப்பட்ட பசும்புதர்களும் பூச்செடிகளும் குட்டை மரங்களுமாக தோட்டம் பகல்வெளிச்சம் பொழிந்து ஓவியம்போலத் தெரியும். அங்கே நூற்றுக்கணக்கான சிறிய மண்கலங்களை வரிசையாக கட்டியிருக்கிறார்கள். அவற்றில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டியிருக்கின்றன. கண்ணாடிக்கு இப்பால் அவற்றின் ஓசை கேட்பதில்லை, அவை ஒளியை சிறகுகளால் துழாவியபடி பறந்து சுழல்வதை மட்டும் பார்க்கலாம். வெறுமே இங்கே அமர்ந்து அந்த கண்ணாடிப்பரப்பை பார்த்துக்கொண்டிருப்பதுகூட எனக்குப் பிடிக்கும். மேலும் நான் ஒரு காஃபி அடிமை.

இங்கே கிடைக்கும் தரமான காபி அரிதானது. மென்துணியானால மெத்தை உறையால் மூடப்பட்டு அது கொண்டுவரப்படும். உறையை நீக்கியதும் எழும் புதிய காபிக்கொட்டையின் மணம் அளிக்கும் கிளர்ச்சி உடலெங்கும் பரவுவது. காபியை வேறெங்கோதான் வறுத்து அரைக்கவேண்டும். காபி அரைக்கப்பட்டு வடிகட்டப்படும் மணத்தை உணர்ந்தபின் அந்தக் காபியை குடிப்பது அனுபவம் தணியும் நிறைவின்மையை அளிப்பது. எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழ்வதுபோல மேஜையில் காபியின் மணம் எழவேண்டும். அந்த வெண்ணிறத் துணியுறை ஒரு முறுக்கிக்கொண்ட மலர். அதன் இதழ்கள் மொக்கவிழ எழுவது வானுலகத்து நறுமணம்.

என் செல்போன் சிணுங்கியது. “ராம்” என்றேன்.

“சாரி, இது பஹா ராய். ஸ்ரீ ராம்சந்த் ராய் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பார்”

“ஆமாம், உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உள்ளே வா. ரிசப்ஷனில் என் பெயரைச் சொல். நான் இங்கே முதல்நிலையில் பின்பக்கம் தோட்டத்திற்கு அருகில் டாப்ஸ் ஆன் கஃபேயில் இருக்கிறேன்…”

“பத்துநிமிடம் சார்”

“சார் வேண்டாம். என்னை ராம் என்று கூப்பிடு”

“ஷ்யூர் சார், ராம்” மெல்லிய சிரிப்பு.

நான் இடக்கையால் மேஜையில் தட்டிக்கொண்டு வலக்கையால் குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் பார்த்துவிட்டு செல்பேசியை ஒலியின்மை ஒழுங்கில் அமைத்து பையில் போட்டுக்கொண்டேன். கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தேன். அப்பால் நீண்ட இடைநாழி வழியாக பகா ராய் வருவது தெரிந்தது. சிறிய உருவம், சிறுமியைப்போலவே இருந்தாள். கையில் ஒரு பெரிய ஆடம்பரப் பை. குதிகால் கூர்ந்த செருப்பு அளிக்கும் கொக்கு நடை.

அவள் வருவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்துவிட்டிருந்தாள். நான் எதிர்பார்த்திருந்ததுபோல மும்பையின் வழக்கமான பெண்ணுருவம் அல்ல. இங்கே பெரும்பாலான பெண்கள் கூர்மையான மூக்கும், சிறிய உதடுகளும், சிறுகுழிக்குள் அமைந்த கண்களும் அமைந்த சிறிய முகம் கொண்டவர்கள். சிறிய தோள்கள், சிறிய மார்புகள், சிறிய இடுப்பு என ஒரு செப்புப்பொம்மையின் தன்மை இருக்கும். கூந்தலை நீவி செஞ்சாயமிட்டு நீட்டி, கண்களில் மையிட்டு, ரத்தச்சிவப்பாக லிபஸ்டிக் பூசி, மெல்லிய விரல்களில் நகச்சாயங்களுடன் அந்த பொம்மைத்தன்மையை கூட்டிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் இவள் கருப்பாக வட்டமுகத்துடன் இருந்தாள். கூந்தலை நீட்டி தோளில் இட்டிருந்தாள். வெள்ளைநிறமான  காலர் வைத்த மேல்சட்டையும் நீலநிறமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பு முகம், அதை பளபளப்பாக்கும் ஏதோ பூசியிருந்தாள். லிப்ஸ்டிக் நிறமற்றது. கண்களில் மை இல்லை. காதுகளில் பெரிய வெள்ளிவளையங்கள். கைகளில் பாசிமணிகளாலான எதையோ அணிந்திருந்தாள். ஒரு வெள்ளி மோதிரம்.

நான் எழுந்து “வெல்கம், ஐயம் ராம் சந்தீப்” என்றேன்.

அவள் அருகே வந்து “ஹாய், நான் பகா ராய்” என்று கையை நீட்டினாள்.

நான் அவளுடைய மென்மையான சிறிய கையை பிடித்து குலுக்கி “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றேன்.

“தேங்க் யூ” என்று அவள் அமர்ந்துகொண்டாள்.

“நீங்கள் ஹிந்தி பேசுவீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

“பேசுவேனே, ஏன்?”

“இல்லை, தென்னிந்தியச் சாயல் இருந்தது.”

“இல்லை, நான் வடக்குதான்.”

“மன்னிக்கவும்” என்று நான் இந்திக்கு மாறிக்கொண்டேன். “என்ன சாப்பிடுகிறீர்கள்? இங்கே காஃபி கிளாசிக் சுவையுடன் இருக்கும்…”

“நான் காபி சாப்பிடுவதில்லை.”

“ஓ, எவ்வளவு பெரிய இழப்பு. பரவாயில்லை. வேறு என்ன? பழச்சாறு?”

“ஆமாம், எனக்கு ஒரு தர்பூசணிச் சாறு.”

“நல்லது” என்று கையை தூக்கினேன். வெயிட்டர் வந்து நின்றான். நான் எனக்கு ஒரு காஃபியும் அவளுக்கு பழச்சாறும் சொன்னேன்.

அவள் கண்களால் டாப்ஸ் ஆன் கஃபேயைச் சுற்றிப் பார்த்தாள். கண்ணாடிப்பரப்புக்கு அப்பால் பச்சை ஒளியுடன் இருந்த தோட்டத்தைப் பார்த்துவிட்டு “நைஸ் பிளேஸ்” என்றாள்.

“ஆமாம், இந்தவகையான அறைவடிவமைப்புதான் இன்றைக்கு புகழ்பெற்று வருகிறது. வீட்டுக்குள் இருக்கும் எல்லா வசதியும் வேண்டும். ஆனால் வெளியே தோட்டத்தில் அமர்ந்திருக்கும் உணர்வும் வரவேண்டும்… இங்கே உட்கார்ந்து அந்தச் சிட்டுக்குருவிகளை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்”

அவள் முகம் மலர்ந்தது. “நர்சரிக் குழந்தைகளைப் போல சண்டை போடுகின்றன” என்றாள்.

“ஆமாம், அருமையான உவமை” என்று நான் சொன்னேன்.

அவள் முகம் சட்டென்று இறுகியது.

“என்ன?” என்றேன்.

“ஒன்றுமில்லை” என எழுந்துகொண்டாள். “நாம், அங்கே அமர்ந்திருக்கலாமே”

“ஏன்?”

“இல்லை”

நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “சரி” என்றேன்.

அவள் எழுந்து சென்று இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள். ஏற்கனவே அவள் அமர்ந்திருந்த திசைக்கு முதுகைக் காட்டியபடி. நான் அவள் எதிரே அமர்ந்தேன். அவள் ஏன் திரும்பிக்கொண்டாள் என்று பார்த்தேன். அங்கே ஒன்றுமில்லை. வெற்றுச்சுவர், அதில் சில கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள், மூங்கிலால் ஆன அலங்காரங்கள் அவ்வளவுதான். வாசல்கூட இல்லை.

காபியும் பழச்சாறும் வந்தது. “எடுத்துக்கொள்” என்றேன்.

அவள் “நன்றி” என எடுத்துக்கொண்டாள். நிதானமடைந்துவிட்டிருந்தாள்.

“நீ இந்தவகையான ஓட்டல்களுக்கு வந்ததில்லையோ? உன்னை சிரமப்படுத்தவேண்டாம் என்றுதான் இந்த இடத்தைச் சொன்னேன்.”

”இல்லையில்லை, நான் எல்லா சந்திப்புகளையும் நட்சத்திரவிடுதியில்தான் செய்கிறேன்… ஷெரட்டனுக்கே பலமுறை வந்திருக்கிறேன். இந்த கஃபேக்கு இப்போதுதான் வருகிறேன்.”

“நல்லது” என்றேன்.

“நான் ஃபைல்களை கொண்டுவந்திருக்கிறேன். எங்கள் பிராஜக்ட் என்ன, எஸ்டிமேட் என்ன, பட்ஜெட் என்ன எல்லாமே இதில் உள்ளது..” என்று ஒரு ஃபைலை எடுத்து வைத்தாள். சிறிய ஃபைல்தான். ஆனால் அழகான சிவப்புப் பிளாஸ்டிக் உறையுடன் இருந்தது.

“அதை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். முதலில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல். சொல்லும்போதுதான் உண்மையான அர்த்தம் தெரியவருகிறது.”

“சொல்கிறேன்” என்று அவள் புன்னகைத்தாள். முதல்முறையாக அவள் முகத்தில் ஒரு குழந்தைத்தன்மை வெளிப்பட்டது. அவள் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழியும், கண்கள் சற்றே இடுங்கியமையும்தான் அதற்குக் காரணம் என்று தெரிந்தது. நெற்றியில் விழுந்த முடியை நீவி ஒதுக்கிவிட்டு “எங்கள் நிறுவனம் இந்தியாவிலேயே சிறந்த வரவேற்பாளர்களை அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். அது மிகை. ஆனால் அப்படி எங்கள் வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்” என்றாள்.

நான் சிரித்துவிட்டேன். அவளும் சிரித்து “வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மும்பையில் இந்த ஐடியாவுக்கே நாங்கள்தான் முன்னோடிகள். ஏழாண்டுகளுக்கு முன்பு சிறியதாக இது ஆரம்பிக்கப்பட்டது அப்போது இப்படி ஒரு தேவை இருப்பதே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு மாதம் நாற்பது நிகழ்ச்சிகளுக்குமேல் இருக்கின்றன. நிரந்தர ஊழியர்கள் ஐம்பதுபேர் இருக்கிறார்கள்.”

அவள் அதே புன்னகையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் “இப்போது எங்களிடம் ஐந்தாயிரம் முகங்கள் இருக்கின்றன. எல்லா வகையிலும் உள்ளவர்கள். இளம் ஆண்கள், அழகான இளம்பெண்கள். எல்லா சமூகநிலைகளிலும் எங்களிடம் முகங்கள் இருக்கின்றன. வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் கிழக்குப் பகுதி மக்கள் ஆங்கிலோ இந்தியர்கள்…. உங்கள் தேவைக்கு ஏற்ப ஆட்களை அனுப்புவோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதற்கேற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.”

“கல்லூரி மாணவர்கள்தான் மிகுதியும். அவர்களுக்கு இது பகுதிநேர வேலை. நாங்கள் அழகு, தோரணை எல்லாம் பார்த்துத்தான் ஆளை எடுப்போம். அவர்களுக்கு இரண்டுமாதப் பயிற்சி கொடுப்போம். மொழிப்பயிற்சியும் நன்னடத்தைப் பயிற்சியும் இடர்சமாளிப்புப் பயிற்சியும் உண்டு. அதற்கே நிறைய முதலீடு செய்கிறோம். அவர்களுக்கு மாதம் மூன்று நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு அனுப்புகிறோம். அது ஒரு நல்ல ஊதியம் அவர்களுக்கு. மாணவர்கள் படிப்பை முறிக்காமலேயே வேலைசெய்து பணமீட்டலாம். ஆகவே நடுத்தரவர்க்கப் பெண்கள் மட்டுமல்ல உயர்குடிப்பெண்களும்கூட வருகிறார்கள்.”

“சீருடை அணிந்திருப்பார்களா?”

“சீருடை வேண்டுமென்றால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே அதை வடிவமைத்து அளிக்கவேண்டும்…”

“எங்கள் செலவில்?”

“ஆமாம், அது ஒப்பந்தத்திலேயே உள்ளது” என்றாள். “ஆனால் இந்த சேவையே சீருடை அணியாமல் பணியாற்றுபவர்கள் தேவை என்பதனால்தான். பெரும்பாலும் யாரும் சீருடை வேண்டுமென்று சொல்வதில்லை. வீட்டு நிகழ்ச்சிகளிலேயே கூட விருந்தினர் போலவோ குடும்ப உறுப்பினர் போலவோ தோற்றமளிப்பவர்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்”

“ஆமாம், அது வேறொரு உணர்வை உருவாக்குகிறது…” என்றேன்.

“எங்கள் பணியாளர்கள் தங்களை ஊழியர்கள் என்று சொல்லமாட்டார்கள், தன்னார்வலர் என்று சொல்வார்கள். நல்ல உயர்தர உடைகளும் ஆபரணங்களும் அணிந்திருப்பார்கள். சீருடை அணிந்த ஊழியர்களிடம் தோன்றாத நெருக்கமும் மதிப்பும் இவர்களிடம் தோன்றும்… பலர் உயர்படிப்பு படித்தவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள். முனைவர் பட்ட ஆய்வுசெய்பவர்களே எழுபத்தேழுபேர் உள்ளனர்.”

“நல்லது” என்றேன் “உண்மையில் எங்களுக்கும் அப்படிப்பட்டவர்கள்தான் தேவை… எங்கள் நிறுவனம் பற்றியும் எங்கள் விருந்தினர்களைப்பற்றியும் ஓர் அறிமுகம் அவர்களுக்கு இருந்தால் நல்லது.”

“அது சிறப்புச் சேவை, ஆனால் அதற்கான ஆட்கள் நிறையபேர் இருக்கிறார்கள். உங்களுக்கு முழு நிறைவு ஏற்படும்.”

“இவர்கள் உங்கள் முழுநேர ஊழியர்களல்ல என்றால் இவர்களின் நடத்தைக்கு யார் பொறுப்பு?” என்றேன்.

“இவர்கள் அனைவரிடமிருந்தும் ஒரு பாதுகாப்புத்தொகையை வாங்கியிருக்கிறோம். ஏதாவது சிக்கலென்றால் அந்தப்பணம் இழப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தம். எங்கள் நிரந்தர ஊழியர்கள் இருந்து நேரடியாக கண்காணிக்கவும் செய்வார்கள்.”

“எங்கள் விருந்தினர்கள் பாதிக்குமேல் வெளிநாட்டவர்கள்…”

“சரியான உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவர்கள் எங்களிடம் உண்டு. பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபு, ஜப்பானிய மொழி பேசுபவர்கள்கூட இருக்கிறார்கள்.”

“கட்டணம்?” என்றேன்.

“மொத்த நிகழ்ச்சிக்கும் சேவைக்குத்தகை எடுப்பதுதான் எங்கள் வழக்கம்… அது பேரம்பேசத்தக்கது” அவள் மீண்டும் புன்னகைசெய்தாள்.

நான் நீண்ட மூச்சுடன் கைகளைக் கோத்துக்கொண்டேன். சூட்டிகையான பெண் சூட்டிகையானவள். ஆனால் எந்த எல்லைவரை பொறுமை தாங்கும் என பார்த்தாகவேண்டும்.

“ஆனால் நீ விருந்துகளில் வந்து நிற்க மாட்டாய் என நினைக்கிறேன்.”

“இல்லை, நான் மக்கள்தொடர்பு மட்டும்தான் செய்கிறேன்.”

“மக்கள் தொடர்புக்கு உன் தோற்றத்தில் ஒருவர் வருவது ஆச்சரியம்தான்… தென்னிந்தியாவில் உன்னை விரும்புவார்கள்” என்றேன்.

”ஆமாம் ராம், ஆனால் வட இந்தியாவிலும் விரும்புகிறார்கள். நான் இந்த நிறுவனத்தில் நுழைந்தபோது இருந்த வியாபாரத்தை என் முயற்சியால் இருபது மடங்காக ஆக்கியிருக்கிறேன்.”

”ஓ” என்றேன்  “உன் வழி என்ன?”

“பொழிவது, கொட்டி மூடுவது… இருபதுபேர் போனால் போதும் என்ற இடத்தில் நாற்பதுபேரை அனுப்புவேன்.”

“ஓ” என்றேன்.

“இந்த விழாக்களெல்லாமே கொண்டாட்டமானவையாக இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். அதிகம்பேர் வந்து ஓடியாடினால் நிறைவடைகிறார்கள்… ஆனால் எங்கள் ஊழியர்களை மிகச்சிறப்பாக உடையணிந்து செல்லவைப்பேன். ஆகவே அவர்களை எடுபிடிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.”

“ஆனால் நீ மக்கள் தொடர்புதான் செய்கிறாய்” என்றேன். “நீ வியாபாரம் பேசச்சென்றால் வருபவர்கள் உன்னைப்போன்ற தோற்றம் உடையவர்கள் என்று நினைப்பார்கள்.”

“ஆமாம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று அவள் புன்னகைத்தாள். “அதற்குத்தான் இந்த ஃபைல். நீங்கள் அறைக்குச் செல்வதற்குள் நான் நூறு முகங்களை மின்னஞ்சலில் அனுப்பிவிடுவேன். இந்தி நடிகர்களைப் போல் இருப்பார்கள்.”

“அதிகமாக எப்படிப்பட்டவர்களை கேட்கிறார்கள்?”

“கோவாப்பகுதி ஆங்கிலோ இந்தியர்களை… அவர்களைப் பார்த்தால் வெள்ளையர் போலிருப்பார்கள்.”

“நீ எந்த பகுதி? தமிழ்நாடா?”

“இல்லை, நான் ஜார்கண்ட்…”

“உன் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை.”

“பகா என்றால் எங்கள் இனத்துக்குரிய பெயர்”

“நீ?”

“நான் கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள்” என்றாள்.

“அப்படியா?” என்றேன். “ஆனால் இப்போது தெரிகிறது. உன் முகம் அப்படியே கோண்ட் முகம்தான்… எங்களுக்கு அங்கே ஒரு எஸ்டேட் இருக்கிறது. நிறைய கூலிகள் வேலைசெய்கிறார்கள்.”

“ஆம், கோண்டுகள் அஸாமில்கூட எஸ்டேட் வேலைசெய்கிறார்கள்.”

“நீ எப்படி இங்கே வந்தாய்? நீ என்ன படித்திருக்கிறாய்?”

“எம்.காம், அதன்பின் எம்.பி.ஏ. கூடவே ஃபேஷன் டிசைனிங்.”

“உன் குடும்பம்…?”

“அவர்கள் ஜார்கண்டில்தான் இருக்கிறார்கள். என்னை ஒரு மும்பைக்காரர் தத்தெடுத்து படிக்க உதவிசெய்தார்.”

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை தூரம் தாங்குவாள்? மேஜைமேல் நாஃப்கினில் சுற்றி வைக்கப்பட்டிருந்த கரண்டியையும் முள்ளையும் என் கைகள் நெருடிக்கொண்டிருந்தன.

”என்ன படித்தாலும் உன் முகம் உன் இடத்தை தீர்மானித்துவிடுகிறது இல்லையா?” என்றேன்.

“ஆம், அது ஒரு எல்லைதான். ஆனால் எந்த எல்லைகளையும் கடக்கமுடியும்… நீங்கள் எங்கள் சேவைக்குப்பின் என் முகம் மாறியிருப்பதை காண்பீர்கள்.”

நான் சிரித்துவிட்டேன். “உன்னால் நன்றாகப் பேசமுடிகிறது” என்றேன்.

அவள் புன்னகைத்து “கற்றுக்கொண்டேன்” என்றாள்.

”நான் இந்த ஒப்பந்தத்தைத் தரமுடியும், ஒரு நிபந்தனையின் பேரில். எக்காரணம் கொண்டும் நீ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது”

“பொதுவாக நான் வருவதில்லை ராம், நீங்கள் கவலையே படவேண்டியதில்லை.”

“ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாருமே உயர்வர்க்கம் உயர்குடிகள்… சட்டென்று அவர்கள் உன்னை அவமதித்துவிட வாய்ப்புண்டு…”

“அப்படி நான் நினைக்கவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் பரவாயில்லை, நான் வரமாட்டேன்.”

“இல்லை, வாய்ப்பிருக்கிறது. உன் தோற்றத்தைப் பார்த்தால் நீ ஏதோ சாப்பாட்டுக்காக வந்து நிற்கிறாய் என்று நினைத்துக்கொள்வார்கள்…”

அவள் சிரித்துவிட்டாள். “அந்த வாய்ப்பைக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.”

நான் என் கையிலிருந்த முள்கரண்டியை மேஜைமேல் வைத்தேன். அதை இறுகப்பற்றியிருந்தேன் என்று தெரிந்தது.

“ஸாரி நேகா.”

“பகா”

“எஸ் பகா ராய்… இந்த ராய் யார்?”

“என்னை படிக்க வைத்தவர்”

“ஓ” என்றேன். “மீண்டும் ஸாரி… இது கார்ப்பரேட் உலகம். எதிரியின் எந்தப் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இங்கே எழுதாவிதி. எந்தப் பலவீனத்தையும் ஆற்றலாக எப்படி மாற்றிக்கொள்வது எப்படி என்பது அதன் இன்னொரு பக்கம். உன் தோற்றமும் பிறப்பும் உனக்கு பலவீனமா என்று சோதனைசெய்து பார்த்தேன்… தப்பாக நினைத்துக்கொள்ளாதே.”

“ராம், எனக்குப் பின்னால் அந்த படத்தை பார்த்தீர்களா?”

“எந்த படம்?”

“அந்த கறுப்புவெள்ளை படம்… உணவை வீணாக்கக்கூடாது என்று ஃபுட் ரெஸ்க்யூ நிறுவனம் வைத்திருக்கும் விளம்பரம்… அதில் ஒரு குழந்தை கையில் பெரிய பாத்திரத்துடன் நின்றிருக்கிறது.”

கரிய குழந்தை, கன்னத்துக் குழியுடன் அழகான வெள்ளைப் பற்களுடன் காமிராவைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. பரட்டைத்தலைமுடி. இடையில் ஒரு கந்தலாடை. கையிலிருந்த பெரிய அலுமினியத் தட்டில் கொஞ்சம் அரிசிச் சோறு. ’நீங்கள் ஒரு குழந்தைக்கு உணவூட்டவிரும்பினால் உணவு வீணாவதை குறைத்தாலே போதும்.’

“ஆமாம்” என்றேன்.

”அது நான்தான்… இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்… எங்கள் மலைக்கிராமத்திற்கு வெள்ளைக்காரர்கள் வந்து எடுத்தது. நான் கல்லூரியில் படிக்கும்போது மும்பையில் ஓர் உணவகத்தில் இந்தப்படத்தை முதலில் பார்த்தேன்.”

“ஓ” என்றேன். அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சிரிக்கும்போது தோன்றும் பகாவின் உருவம்தான் அது. பழங்குடிக் குழந்தைகளுக்குத்தான் அந்த நட்பார்ந்த சிரிப்பு உண்டு. அவர்கள் குழந்தைகளை அதட்டுவதோ அடிப்பதோ இல்லை. கட்டாயப்படுத்தி எதையும் செய்யவைப்பதுமில்லை. அங்கே அத்தனைபேரும் குழந்தைக்கு பெற்றோர்தான்.

“முதலில் அந்தப்படத்தைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுவிட்டேன். பார்த்ததுமே தெரிந்துவிட்டது. இன்றுவரை எவருக்குமே அது நான் என்று தெரியாது. அன்று எனக்கு தலைசுற்றியது. விழுந்துவிட்டேன். அதன்பிறகு அவ்வப்போது இதைப் பார்ப்பேன். என்னால் இதை நேருக்குநேர் பார்க்கமுடியாது” அவள் புன்னகைத்தாள். “முதலில் பார்த்தபோதிருந்தே தோன்றியது இந்த உலகத்திடமே பிச்சை எடுத்துக்கொண்டு நின்றிருக்கிறேன் என்று. நான் மட்டுமல்ல எங்கள் குலமே பிச்சைப்பாத்திரத்தை நீட்டி நின்றிருக்கிறது. பிறகு தோன்றியது, அங்கிருந்து மீண்டுவிட்டேனே என்று. மீளவேண்டும் மீளவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். எவ்வளவு மீண்டுவிட்டேன் என்று திரும்பிப்பார்க்கையில் பெருமிதம்தான். ஆகவே நீங்களோ உங்கள் விருந்தினரோ என்னை ஒன்றும் செய்யமுடியாது.”

நான் புன்னகையுடன் “பகா, நான் என்ன தொழில்செய்கிறேன் தெரியுமா?”

“நிர்வாகம்” என்றாள்.

“இல்லை, முக்கியமாக நிர்வாகிகளுக்கான ஆளுமைப் பயிற்சி” என்றேன்.  “அந்தப் படத்தை நீ வீட்டில் உன் படுக்கையறையில் ஒட்டிவைக்கலாம். நாள்தோறும் பார்க்கலாம். அது உனக்கு உதவும்.”

அவள் முகம் மாறியது. கண்கள் கூர்கொண்டன.

“நிர்வாகவியலில் ஒன்று உண்டு, வெற்றி வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் ஜெயிக்கமுடியும். ஆனால் எதன்பொருட்டு அந்த வெறி? வெறுமே ஆணவநிறைவுக்காகவோ புகழுக்காகவோ பணத்துக்காகவோ என்றால் சீக்கிரம் சலித்துவிடும். ஏதோ ஒரு புள்ளியில் தோல்வியை ஒப்புக்கொள்ள தோன்றும். நமது எல்லைகளை நாமே எங்கோ வகுத்து வைத்திருப்போம். ஞாபகம் வைத்துக்கொள் ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுவிடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பவரை எந்தப்புள்ளியிலும் தோற்கடித்துவிட முடியும்.”

அவள் முகத்தை கூர்ந்து நோக்கிச் சொன்னேன் “ஆனால் உனக்கு தீர்க்கவே தீர்க்கமுடியாத காரணம் இருக்கிறது. நீ ஜெயித்துக்கொண்டே இருக்கமுடியும்” என்றேன். “நீ அந்த பாத்திரத்தை நிறையவே விடக்கூடாது.”

அவள் “ஆமாம் ராம்” என்றாள். மீண்டும் புன்னகைத்தாள்.

“வாழ்த்துக்கள்” என்று எழுந்து கைநீட்டினேன். ”சிலர் ஜெயிப்பதற்காகவே பிறக்கிறார்கள், அவர்களில் ஒருவரை இன்று சந்தித்திருக்கிறேன்.”

“நன்றி” என்று அவள் கைகுலுக்கினாள்.

மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா


மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?'

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அருகில் வந்து கடற்கரைப்பக்கம் சென்றான். ஆயிரத்து இருநூறு வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.

''காமிரா வேணுங்களா... நிக்கான், ஜப்பான்... அப்புறம் ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?"

அவன் மௌனமாக இருக்க, ''செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க... கோலாபூரி..."

"..."

"எத்தனைதான் தருவீங்க?"

"..."

"வேற ஏதாவது வேணுங்களா?"

"... ... ..."

"பேசமாட்டீங்களா..?"


அவனுக்கு, பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொள தொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். அவன் ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று 'சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!" என்றான் செருப்பு விற்ற சிறுவன்.

அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்து விட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.

''எக்ஸ்கியூஸ் மி..."

அவர் திரும்ப, ''புரொபசர் சந்திரகுமார்..."

"யெஸ்..."

"என் பெயர் அஜய்... நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்..."

"ஓ! நீதானா அது? 'யங்'காக இருக்கிறாயே?!"

"எனக்கு இருபத்தைந்து வயது!"

"எனக்கு ஏறக்குறைய எழுபது.." என்றார். ''கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்... ஒரு முறை 'பைபாஸ்' ஆகிவிட்டது. கடன் வாங்கின ஆயுள்!"

"மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்..." என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம் வைத்துச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

"ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை... சான்றிதழ்களை அப்புறம் பாக்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்... பிரசுரகர்த்தர்கள் கெடு..."

"என்ன புத்தகம்?"

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

"பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஒரு அந்தரங்கப் பார்வை..." பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான 'போஸ்'களில் படம் பிடித்துக்கொண்டு, "என்ன மச்சி... கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!"

"இவர்களுக்கா பல்லவச் சிற்பக்கலை பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?"

"ஏன்?"

"பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், ஹ்யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசார மற்றது..."

"நீயும் இந்தத் தலைமுறைதானே?"

"ஆம்... ஆனால், வேறு ஜாதி..."

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ''பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?"

"கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் இந்தத் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.."

மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா 

அவன் அவனைச் சிநேகப் பாவத்துடன் பார்த்து, ''ஐ லைக் யூ..." என்றார்.

"எப்போது வேலைக்கு வரலாம்?"

"இப்போதே என்னுடன் வா... உன் பைகள் எல்லாம் எங்கே?"

"எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!"

"இவ்வளவுதானா?"

"இதில் கூடப் புத்தகங்கள்தான் அதிகம்..."

"செஸ் ஆடுவாயா?"

"சுமாராக..."

"சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப்பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமஸும் படிப்பேன் என்று சொல்லாதே..."

''மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்..."

"கிரேட்... யங்மேன், உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்..."

இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் காரருகில் சென்று, ''மாருதி ஓட்டுவாயா?"

"நான் ஓட்டாத வாகனமே இல்லை!" என்று சிரித்தான்.

''சிகரெட் பிடிப்பாயா?"

"இல்லை..."

"கல்யாணம் ஆகிவிட்டதா?"

"இல்லை..."

"பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?"

"உங்கள் இஷ்டம்..."

மாருதி காரைத் திறந்து முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

"ஓட்டுகிறாயா?"

"இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது..."

"எந்த ஊர் நீ?"

"எதும் என் ஊர் இல்லை..."


கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அர்ச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.

"அமைதியான இடம்... இவன் பெயர் ஸ்னோ! இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?"

"இல்லை..."

"அலை ஓசை பழகிவிடும்... மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக் கொள்... மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில்... மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்..."

"அப்படியா?!" உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

"யாருக்கு ஷகால் பிடிக்கும்?"

"எனக்கு... உனக்கு?"

''கன்டின்ஸ்கி..."

"ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டு சேர்த்திருக்கிறது உன்னை... நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டது போலத் தோன்றுகிறது..."

அவன் புன்னகைத்தான். ''மிகைப் படுத்துகிறீர்கள்..."

"நீ எதுவரை படித்திருக்கிறாய்?"

''கல்லூரிக்கு முழுதும் போக வில்லை... படிப்பு தடைப்பட்டு விட்டது. முதல் பி.ஏ. ஹிஸ்டரி படித்தேன்..."

"எங்கே படித்தாய்?"

"லண்டனில்..."

"விட்டுவிட்டாயா?"

"ஆம்... பெற்றோரை ஒரு விபத்தில் இழந்தபின்..."

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்து வைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்... 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ஒரு ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், 'தி டவ் ஆஃப் பவர்', 'மெக்கியா வல்லியின் 'பிரின்ஸ்', மோதியின் 'ஜூரிஸ் புடன்ஸ்'...

"உன்னை வகைப்படுத்த முடியவில்லை..."

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.

"எப்போது ஆரம்பிக்கலாம்?"

"இப்போதே!"

முதல் மாதத்தில் அவன் முழுத் திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதி வைத்திருந்ததையெல்லாம் மிகச் சுத்தமாகப் பிழையே இன்றி எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்து விடுவான், ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடினார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்... சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்கு கண்பார்வை மங்கியதால் படித்துக் காட்டினான்.

"ஒரு நாள் மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்திலிருந்து படித்துக் காட்டேன்..." என்றார்.

"என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது..."

"நான் தற்போது எழுதும் புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"

"இது நம் நாட்டுக்குத் தேவையற்றது..."

"எப்படிச் சொல்கிறாய்?" என்றார், கோபப்படாமல்.

"மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?"

"நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?"

"தெரிந்து..."

"நம் இந்தியாவை ஒன்று சேர்த்த இந்த மரபு இப்போது தேவையில்லை என்கிறாயா?"

"இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்... அதுபோல் சோழமண்டலம்... வேங்கி... இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது..."

"எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை... நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்..."

"காரணம், உங்களையெல்லாம் - ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்..."

"இருந்தும் இந்த நாட்டை ஒன்று சேர்ப்பது கலாசாரம்..."

"இல்லை... ஏழ்மை!"

"உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?"

"கரைக்கோயிலின் ஆர்க்கிடெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பிதான் என் ஹீரோ... மகேந்திரவர்மன் அல்ல..."

''மனம் மாறுவாய்..." என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

நியூஜெர்ஸிக்கு போன் பண்ணி,  ''ராமு, எனக்கு செக்ரட்டரியாக ஒரு இளைஞன், ஏதோ பூர்வஜென்ம பாக்கியத்தால் சேர்ந்திருக்கிறான்..." என்று கால்மணி நேரம் அவனையே புகழ்ந்து பேசி, ''அம்மாவை அனுப்பாதே... நன்றாகப் பார்த்துக் கொள்கிறான். ஐஸ் டீ கூடப் போட்டுத் தருகிறான்..." என்று அவன் முன்னாலேயே போன் பேசியது, அவன் முகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.


வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது, அவனை அறிமுகப்படுத்தினார். ''வினித், திஸ் இஸ் அஜய்... வினிதா என் பெண்..."

"ஹாய், யு லைக் மியூஸிக்?"

"பிடிக்கும்..."

"ஃபில் காலின்ஸ்?" என்றாள், எதிர்பார்ப்புடன்.

"மோட்ஸார்ட்..." என்றான்.

"யக்..." என்றாள் அருவருப்புடன்.

"புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்..."

"ஃபிக்‌ஷன் ரெண்டாம் பட்சம்... ஐ ரீட் போயம்ஸ்..."

"போயம்ஸ்! மைகாட்..."

"தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்..." என்றார் சந்திரகுமார்.

"எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்..." என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் - மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்க வைத்தான். மோட்ஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்க வைத்தான்.

ஒரு நாள் மாலை 'ரொம்ப போர் அடிக்கிறது' என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ''கடற்கரைப் பக்கம் வாக்மன் போட்டுக் கொண்டு நடக்கப் போகிறேன், நீயும் வருகிறாயா? நீ பாட்டுக்குக் கவிதை படித்துக் கொண்டு இரு..."

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ''இரவு எனக்கு நில வொளியில் கரைக்கோயிலைப் பார்க்க வேண்டும்.."

"அழைத்துச் செல்கிறேன், வா!"

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மாயிருந்தார். இருவரும் இப்போது நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. 'அவனைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும்... இவனைப் போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது...'

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது...

'How did you die...?'

கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

'Death comes witha crawl,

or comes with a pounce

And whether he is slow or spry

It is not the fact that

you are dead that counts

But only, how did you die...?'

வாசலில் ஜீப்பிலிருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே அணுகினார்...

''புரொபசர் சந்திரகுமார்?"

"யெஸ்..."

''ஐ'ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்...'' என்று அடையாள அட்டையைக் காட்டி, ''இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?"

கண்ணாடி போட்டுக் கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை. கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்ட வட்டமாகச் சொல்ல முடிந்தது.

"இவன் பெயர் அஜய், என் செக்ரட்டரி..."

"இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை... அவன் இங்கே இருக்கிறானா?" என்றார் பரபரப்புடன்.

"என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது..."

வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில் ''சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்... வி காட் ஹிம்!"

"விவரமாகச் சொல்லுங்களேன்!"

"இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?"

"இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரட்டரி... ரொம்ப நல்ல பையன்.."

"புரொபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப்பெரிய தீவிரவாதி... மொத்தம் பதினெட்டுக் கொலை இவன் கணக்கில் உள்ளது..."

அவருக்குச் சிரிப்பு வந்தது. 'இப்படிக் கூட அபத்தமான போலீஸ் அதிகாரிகள் இருப்பார்களோ?'

'சம்திங் பாஸிட்டிவ்லி ராங்... ஆள் மாறாட்டம்... போட்டோ தப்பு..." என்றார்.

"அவன் இங்கேதான் தங்கியிருக்கிறானா?"

"ஆம்..."

"எந்த அறையில்...?"

"மாடியில் என் மகன் அறையில்..."

"மகன் இருக்கிறாரா?"

"அமெரிக்காவில் இருக்கிறான்..."

"என்னுடன் வாருங்கள்..." சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ''என் செக்ரட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி... அழகுணர்ச்சி உள்ளவன்... படித்தவன்... சிந்திப்பவன்..."

அதிகாரி அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இரை தேடும் சிங்கம் போல் அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தான்... மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக... ஜன்னல் மலர்ஜாடியில் ரோஜா.

அதிகாரி ஒழுங்கைப் பற்றிக் கவனமின்றி, அவன் மேஜை இழுப்பறைகளைச் 'சரக்... சரக்..." என்று திறந்தார். மலர்ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன."

"புரொபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா? உம் நம்பிக்கைக்குரிய காரிய தரிசியின் சொத்துக்களை!"

சந்திரகுமார் அருகே சென்றார்.

"இது உங்களுடையதல்லவே?"

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி வைத்திருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மாகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.

"ஐ காண்ட் பிலீவ் இட்... திஸ் இஸ் இம்பாஸிபிள்..."

"இவன் பெயர் அஜய் அல்ல... இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போயிருக்கிறான்?"

"கடற்கரைக்கு என்று சொன்னேனே!"

"பதட்டப்படாதீர்கள்... அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும்வரை பதுங்கியிருக்கலாம்..."

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதபவென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல்கதவைச் சாத்திக் கொண்டார்கள்.

"வெயிட்... யு காண்ட் டூ திஸ்... அவன் வேறு யாரையோ..."

''ஷட் அப் ஓல்ட்மேன்... கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு - தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள்... வாயை மூடிக்கொண்டு, நடப்பதைக் கவனிப்பது உசிதம்!"

"என்ன செய்யப் போகிறீர்கள்? காட்! என் மகள்... என் மகள் அவனுடன் இருக்கிறாள்!"

"அவளைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம்..."

"வாட் யு மீன்..." என்று அவர் பால் நகர்ந்தவரை, ஒரு கான்ஸ்டபிள் "ஏய் தாத்தா, கம்முனு அப்படிப் போய் உக்காரு... இல்லை அடிபடும்.." என்றார்.

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியிலிருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. 'என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது... ஆள் மாறாட்டத் தப்பு. இவன் இல்லை. இவன் இல்லை... தடுக்க வேண்டும்...'

''வர்றாங்க... எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டா போதும்!"

சந்திரகுமார் அப்போதுதான் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கியைப் பார்த்தார். ஜன்னல் வழியே வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக்கொண்டே வந்தான். அவர்கள் கைகோத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

"ரெடி!"

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான்...

நின்றான்.

வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

''நாம் வந்திருப்பதைக் கண்டுபிடித்து விட்டான், பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்து... கெட் அவுட்! வெளியே ஓடுங்க... பிடிங்க..!"

இதற்குள் அஜய், வின்னியை இழுத்துத் தன்னை முன்னால் மறைத்துக் கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். வின்னியின் நெற்றியில் தன் பையிலிருந்து எடுத்த துப்பாக்கியைப் பதித்து, ''ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்... நில்லு!"

'சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்' என்று சந்திரகுமார் நினைத்தார். 'இப்போதுகூட அனைத்தும் கனவு' என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை, அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மருதி காரில் அவளைத் திணித்து ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் 'வாக்கி டாக்கி'யில் ஆணைகள் பிறப்பித்தனர். ''க்விக்! செண்ட் த ஜீப்... ஹி இஸ் ரன்னிங்..."

புரொபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொபசர் வெலவெலத்துப் போய், ''என் மகள்... என் மகளைக் காப்பாற்றுங்கள்... அவளைக் காப்பாற்றுங்கள்..."

புழுதிப் படலம் அடங்க, சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க... கிழக்கே முழுசாகச் சந்தன நிலத்தில் நிலா உயர்ந்து கொண்டிருந்தது.

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.

''என்ன ஆச்சு... என் மகளுக்கு என்ன ஆச்சு?"

''ஓ! ஷி இஸ் ஆல்ரைட்.."

"பையன்?"

"கடற்கரையில் சுடவேண்டியிருந்தது..." அவர்கள் இந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

''வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்!" என்று அவளைக் கட்டிக் கொண்டு, நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ''எங்கேயாவது அடிபட்டதா?"

"இல்லை அப்பா... அவன் என்னை எதும் செய்யவில்லை..."

''எதும் செய்யவில்லையா?!"

"நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்குமுன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்துவிட வேண்டும்' என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!"

சந்திரகுமார் கரைக்கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களில் மேலும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

"அப்பா, அவர்கள் அவனை...அவனை..." என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்து அவன் கிடந்தான். மாருதியின் ஹெட்லைட் வெளிச்சத்தில், மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

'உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்... இப்போது நம் எதிரி நாமேதான்!'

''மைகாட்! வாட் வெண்ட் ராங்?'' என்றார் சந்திரகுமார்.

"என்ன?"

"நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலிவாங்கும் படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே... எங்கே..?"

"அந்த கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்..." என்றார் அதிகாரி.

சப்ளையர்!!!




 எஸ்.என் மாடியில், மேகநாதனை பார்த்தேன். ஈஸ்வரி ஸ்டொர்ஸில் காபி பொடி அரைத்துக் கொண்டிருந்தவன். TASMAC சப்ளையராக அவனைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.

சிரித்தபடி என்னை நொக்கி வந்தவன், "சம்பளம் பத்தல ஸார். அதான் தனியா ஏதாச்சும் செய்யலாம்னு வெளிய வந்துட்டேன். அது வரைக்கும் இங்கு வேலை. வெள்ளி, சனி மட்டும் முழுநாள், மற்ற நாளெல்லாம் பகல் மட்டும் தான்"

அவன் ஒற்றை ஆளாக பொடி அரைத்து, கவரில் நிரப்பி எல்லோருக்கும் கொடுக்கும் லாவகம் ரசிக்கும் படி இருக்கும். வருபவர் யார் என்று தலை நிமிர்ந்து பார்க்காமல் வேலையிலேயே குறியாக இருப்பவன், என்னை கவனித்திருக்கிறான். இத்தனைக்கும் மாதம் ஒரு முறை தான் போவேன். 

"அண்ணாச்சி ஒன்னும் சொல்லலியா?"

"அவரு போக வேணாம்னு தான் சொன்னாரு. ஆனா, வேற வேலை குடுக்கல. மளிகைய பாத்துக்க வேற ஆள போட்டுட்டாரு. கே.கே நகர்ல கூட மளிகை கடை தான். காபி பவுடர் மாம்பலத்துல மட்டும் தான். கட்டுபடி ஆகல ஸார். அதான்"

"என்ன செய்ய போற?"

"தண்ணி கேன் போடலாம்னு இருக்கேன் ஸார். அண்ணாச்சி கிட்ட சொல்லிட்டேன். அங்க வர்ற கஸ்டமர்களும் வாங்கிக்கிறேனு சொல்றாங்க. வண்டிக்கு பாங்குல லோன் போட்டிருக்கேன். ஒரு மாசம் ஆகும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டியது தான்."

"கேன், தண்ணிக்கு என்ன பண்ணப் போற?"

"சைதாபேட்டையில் ஃப்ரெண்டு பண்றான் ஸார், அவன் கிட்ட இருந்து தான் வாங்கப் போறேன்"

"நீ ஒன்னு பண்ணு, இந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணி, ராஜன் ஒருத்தர் கிட்ட பேசு. இந்த ஏரியா முழுக்க தண்ணி அவரு தான் ஹோல்சேல் சப்ளை. நான் சொன்னேன்னு சொல்லு. கேன் கூட அவரு ஏற்பாடு பன்ணுவார், உன் கம்பெனி பேரோட. ஆரம்பிச்ச உடனே சொல்லு, நான் வாங்கிக்கிறேன். எங்க அபார்ட்மெண்டுல அறுவது வீடு இருக்கு. எப்படியும் ஒரு இருவது பேரையாவது வாங்க வச்சிடலாம்."

நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன்.

ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வேலை எங்க இருந்தாலும் எஸ்.என் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். மேகநாதனும் நடப்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தான். வாரக் கடைசியாக இருந்ததால் சரியாக பேச முடியவில்லை. 

கவிதா ஊரில் இல்லாத ஒரு நாள் பகலில் சென்றேன்.

மேகநாதன் சோகத்துடன் ஓரமாக உட்கார்ந்திருந்தான். ரெண்டு பாட்டில் பீர் கொண்டு வந்து கொடுத்தவனை அருகில் அழைத்து உட்கார வைத்து, பேச்சு கொடுத்தேன்.

"ஏன் டல்லா இருக்கே? லோன் என்ன ஆச்சு?"

"அது அடுத்த வாரம் வந்துடும் ஸார். வண்டியும் எடுத்துடுவேன். ஆனா இப்ப பயமா இருக்கு"

"ஏன்"

"ஈஸ்வரி கஸ்டமர்லாம் பிடி குடுக்காம பேசறாங்க. முதல்ல சரின்னு சொன்னவங்க இப்ப பின் வாங்குறாங்க. சாராய கடைல வேலை செய்றவன எப்படி நம்பி வீட்டுகுள்ள விடறதுனு அவங்க பேசிக்கிறது என் காதுலேயே விழுது"

"அண்ணாச்சி ஏதாச்சும் சொல்லிட்டாரா?"

"இல்ல ஸார். அவரு தங்கமானவரு. அவரு தான் இங்க வேலை செய்யறத யார் கிட்டயும் சொல்லாதே அப்படினு சொன்னாரு"

"சரி விடு. ராஜன போய் பாத்தியா?"

"பாத்தேன் ஸார். நிறைய உதவி செஞ்சாரு. ஆனா காசு விஷயத்துல கரெக்டா இருக்காரு. அதான் பயமா இருக்கு. அவ்வளவு முதல் போட்டு, கஸ்டமர் கிடைக்கலனா எப்படி?"

அவனைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. 

"அதெல்லாம் வொரி பண்ணிக்காதே.  ஒருத்தன் நல்லா ஆனா ஜனங்களுக்கு பிடிக்காது. நீ எங்க அபார்ட்மெண்டுல ஆரம்பி. நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன்."

"தாங்க்ஸ் ஸார்"

"சாயந்திரம் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு  போறேன். ஒயிஃப் வீட்டுல இல்ல. நீ அங்க வந்து வீட்டையும் பாரு, முடிஞ்சா நாலஞ்சு பேர அறிமுகப் படுத்தறேன். காலையில வழக்கம் போல வேலைக்கு போயிடு.

`சே...என்ன சமூகம் இது? டாஸ்மாக்ல வேலை செய்யறது ஒரு குத்தமா? இத்தனைக்கும் மேகநாதனுக்கு எந்த பழக்கமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். வர்றவங்க பாதி பேரு ஏரியா விட்டு ஏரியா போயி குடிக்கிறது தெரியாதா என்ன? எப்படியும் கண்டிப்பா வாங்குற தண்ணி கேனை இவன் கிட்ட வாங்கினா தான் என்ன?' என எண்ணிய படியே வீட்டுக்கு வந்தேன்.

போதையுடன் சேர்ந்து கோபமும் தலைக்கு ஏறியது. குளித்து விட்டு, கணேஷ் கடையில வாங்குன தக்காளி சாதத்தை சாப்பிட்டு விட்டு படுத்தேன். மாலையில் எழுந்து, பார்க்கை பத்து முறை நடந்து விட்டு, வீட்டிற்கு வந்து, மேகநாதனுக்கு ஃபோன் செய்தேன். அரை மணி நேரத்தில், விஸ்கியும் ஸ்நாக்ஸுமாக வந்தான். அவற்றை வீட்டில் வைத்து விட்டு அர்ஜுன் வீட்டிற்கு சென்று மணி அடித்தேன். அவர் மனைவி திறந்தார்.

"பையன் எனக்குத் தெரிஞ்சவன். புதுசா தண்ணி கேன் போடப் போறான். நீங்களும் வாங்குங்களேன்" 

"எவ்வளவு தம்பி ஒரு கேன்?"

மேகநாதன் சந்தோஷமாக விலையை சொன்னான். அவனது விஸிடிங் கார்டை கொடுத்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் ஃபோன் செய்யலாம் என்றான். இன்னும் ஐந்தாறு வீடுகளுக்கு கூட்டிச் சென்றேன். எல்லா இடத்திலும் சாதகமான பதில். என் செல்வாக்கைக் கண்டு எனக்கே மலைப்பாக இருந்தது. அதே மூடில், வீட்டிற்கு வந்து, விஸ்கியை திறந்தேன். மேகநாதன் பொறுப்பாக எல்லாவற்றையும் பிரித்து வைத்தான். ராஜா பாட்டை சத்தமாக வைத்து விட்டு, நான் ஏக குஷியோடு பொழுதைப் போக்கினேன். எல்லாவற்றிலும் ஒரு கண்ணை வைத்த படி, மேகநாதனும் கூடவே பாடினான். இரவு கணேஷ் கடைக்குச் சென்று இருவருக்கும் புரொட்டா வாங்கி வந்தான். எப்போது உறங்கினேன் என்று தெரியாது. மேகநாதன் தான் உலுக்கி எழுப்பினான்.

"ஸார், நான் கிளம்பறேன்"

"இருப்பா, நான் டிராப் பண்றேன்"

"பரவாயில்லை ஸார், நான் போயிக்கிறேன். மணி நாலரை தான் ஆகுது. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க"

சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை எஸ்.என் னுக்கு போன போது, மேகநாதனைக் காணவில்லை. வேலையில் இருந்து நின்று விட்டான் என்றார்கள். அவனது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. விஸிடிங்க் கார்டை வாங்காமல் விட்டது தப்போ என பட்டது. ராஜனுக்கு ஃபோன் செய்து மேகநாதனைப் பற்றி விசாரித்தேன். அவன் மறு நாளிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்வதாக சொன்னான். அவனிடம் மேகநாதனின் நம்பரை கேட்க கூச்சமாக இருந்தது, அதனால் கேட்கவில்லை. எப்படியோ, அவன் நல்லா இருந்தா சரி. கேன் எடுக்க ஆரம்பிச்சதும் கூப்பிடுவான்னு நம்பிக்கை இருந்தது.

ஆனால், பத்து நாட்களாக அவன் கூப்பிடவில்லை. நடுவில் இரண்டு முறை வீட்டில் கேன் மாற்றி விட்டார்கள். `ஒரு வேளை பிஸி ஆயிட்டானோ`

இப்படியே ரெண்டு மாதம் ஓடி விட்டது. ஒரு நாள் `வரும் போது காபி பொடி வாங்கி வாங்க' என்று கவிதா சொன்னாள். 

மாலை ஈஸ்வரி ஸ்டோருக்கு சென்றேன். வாசலில் நிறைய தண்ணீர் கேன் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு மோட்டார் வண்டி. அதில் கேன்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக இரண்டு பேர் பிஸியாக இருந்தார்கள். `சே. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் அண்ணாச்சி செய்வது? தன்னிடம் வேலை செய்த ஒருவன் நன்றாக இருப்பது பிடிக்காமல், போட்டியாக தொழில் ஆரம்பித்து விட்டாரே. காசு அவ்வளவு முக்கியமோ? விளங்குவார்களா, இவர்கள் எல்லாம்'.

அதீத கோபத்துடன் கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் சென்று காசு கொடுத்து காபி பொடிக்கு சீட்டு வாங்கினேன். அவர் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு சீட்டை நீட்டினார். வெடுக்கென்று அதனைப் பிடுங்கி, பொடி அரைக்கும் இடத்துக்கு வந்தேன். அங்கே அமைதியாக மேகநாதன் பொடி அரைத்துக் கொண்டிருந்தான். தலைச சுற்றியது எனக்கு.

அவனது வழமை போலவே, வந்தவர் யார் என்று பார்க்காமல், பொடியை அரைத்துக் கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. `இவன் ஏன் திரும்ப இங்க ?` 

டின்னிலிருந்து பொடியை காகித கவருக்குள் கொட்டியபடியே மேகநாதன் சொன்னான் - 

"எவ்வளவு சொல்லியும் கேக்காம, அன்னிக்கி நைட்டு விடாம உங்க ஒயிஃப் கிட்ட ஃபோன் பண்ணி பேசினீங்களே. இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா? நெஜமாவே உங்க அபார்ட்மெண்டுல இருந்தவங்க கிட்ட பேசின போது பெரிய நம்பிக்கை வந்துச்சு. தொழில்ல சாதிக்கலாம்னு. எல்லாம் போச்சு. என்ன இருந்தாலும் சாராய கடை வேலைக்கு அவ்வளவு தான் மரியாதை"

`ஃபோன் பண்ணோமா? பண்ணி என்ன பேசுனோம் ?'

சுத்தமாக நினைவில் இல்லை. ஆனால் வழக்கம் போல நன்றாக குடித்து விட்டு கவிதாவிடம் ஏதோ உளறி, தாழியை உடைத்தது மட்டும் உண்மை என புரிந்தது.

"வாசல்ல இருக்குற கேன் எல்லாம்?"

"எல்லாம் என் பெருல நடக்குறது தான். அண்ணாச்சி அவரோட வியாபாரமா பண்றாரு. நீ வழக்கம் போல பொடிய அரைடா. பழைய சம்பளம் வாங்கிக்கோ. தண்ணி கேன்ல வர்ற எல்லா லாபத்தையும் உனக்கே குடுத்துடுறேன். இனிமே கிறுக்குத் தனமா ஏதும் செய்யாதே" அப்படினு சொல்லிட்டார்.

நான், கை நடுங்க பொடி கவரை எடுத்து பையினில் திணித்து, திரும்பி பார்க்காமல் வேகமாக நகர்ந்தேன்.


நிம்மதியை தேடும் நினைவுகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வதந்தி படத்தின் முழு பக்க விளம்பரத்தை  ஹிந்து நாளிதழில் பார்த்த போது தோன்றியது.. அதன் பங்களிப்பவரில் ஒருவரான மீரா...